வாழ்நாள் சாதனையாளர் விருது: நூறு ஜென்மம் எடுத்தாலும் நடிகராகவே பிறக்க ஆசை! கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!!
மத்திய அரசு நடத்தும் 56வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று வருகிறது. ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திரைப்படங்களும் குறும்படங்களும் திரையிடப்படுகிறது. இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்பட கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்தின் 50 ஆண்டு கால கலைச்சேவையை பாராட்டி கௌரவிக்கும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது இன்று வழங்கப்பட்டது.
விருது பெற்ற ரஜினிகாந்த் பேசும் போது ,” சினிமாவில் 50 வருடங்கள் பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என்று சொன்னார்கள். ஐம்பது வருடங்கள் ஏதோ பத்து இருபது வருடங்களில் கடந்து போனது போல தான் இருக்கிறது… ஏனென்றால் சினிமாவையும் நடிப்பையும் அந்த அளவுக்கு நான் நேசிக்கிறேன். 100 ஜென்மங்கள் எடுத்தாலும் நான் நடிகராகவே… ரஜினிகாந்தாகவே பிறக்க ஆசைப்படுகிறேன். என்னை இந்த நிலைக்கு உயர்த்திய தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் குறிப்பாக என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
முன்னதாக ரஜினிகாந்த் மேடைக்கு வரும் போதும் விருது வழங்கப்படும் போதும் ஜெயிலர் படத்திலிருந்து பிஜிஎம் ஒலிக்கப்பட்டது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்த விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன், நடிகர் ரன்பீர் சிங் டைரக்டர் பாலா, காந்தாரா இயக்குனர் ரிஷப்ஷெட்டி ஜிவி பிரகாஷ் லதா ரஜினிகாந்த் மகள்கள் ஐஸ்வர்யா சௌந்தர்யா ரஜினி பேரன்கள் யாத்ரா லிங்கா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
![]()

